ஒலி அலைகளைக் கொண்டு பொருட்களை நகர்த்தும் ஆற்றல் கொண்ட புதிய ரோபோவை சுவிட்சர்லாந்து – சூரிச் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.
எளிதில் உடையக் கூடிய மற்றும் சிறிய பொருள்களை கையால் தொடாமல் நகர்த்துவதற்கு இந்த ரோபோக்கள் பயன்படும் என இதனைக் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான மார்செல் ஷக் தெரிவித்தார்.
இந்த ரோபாவில் அரைக்கோள வடிவத்தில் இரண்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றிற்கு நடுவில் ஒலியதிர்வுகளை அனுப்பி பொருள்களை நகர்த்தும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
ஒலியை காற்றில் மிதக்க வைக்கும் தத்துவத்தின் அடிப்படையில் இந்த தொழில்நுட்பத்தை வடிவமைத்துள்ளோம் எனவும் மார்செல் ஷக் கூறினார்.
சிறிய பொருள்கள், மிருதுவான பொருள்கள் மற்றும் கண்ணாடி பொருள்கள் உள்ளிட்டவற்றை நாம் கையால் எடுத்து நகர்த்தும்போது, அந்த பொருள்கள் சேதமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
குறிப்பாக கடிகாரம் மற்றும் நுட்பமான மின் சாதனங்கள் தயாரிக்கும் துறைகளில் மிகச் சிறிய பொருள்களை கையாள்வதில் சிக்கல்கள் உள்ளன.
இந்நிலையில் அத்தகைய பொருள்களை கையால் தொடாமல் பாதுகாப்பாக நகர்த்துவதற்கு ஏற்ற வகையில் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளோம்.
இந்த ரோபோவை கொண்டு எளிதில் உடையக் கூடிய பொருள்களை தூக்கும்போது அவை சேதமடைவதற்கான வாய்ப்புகள் இல்லை.
ஒலியதிர்வின் அழுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ரோபோ செயற்பட்டாலும் இந்த ஒலி அதிர்வுகளை மனிதர்களால் காணவோ அல்லது அவற்றின் சத்தங்களைக் கேட்கவோ முடியாது எனவும் ரோபோ வடிவமைப்பாளர்களில் ஒருவரான மார்செல் ஷக் கூறினார்.